Ananatham

சிறுவாச்சூர்

அருள்மிகு மதுரகாளி அம்மன் திருக்கோவில் – சிறுவாச்சூர் 

தலவரலாறு
சிலப்பதிகாரக் காவிய நாயகி கண்ணகி வரலாற்றுடன் தொடர்பு படுத்தி இங்கு அம்மனின் வரலாறு செவிவழிச் செய்தியாய்க் கூறப்பட்டு வருகிறது. கற்புடைத் தெய்வம் கண்ணகி தன் கணவருக்கு இழைக்கப்பட்ட அநீதியைக் கண்டு மனம் பொறாமல் கோபம் கொண்டு மதுரையை எரித்த பின் மன அமைதியின்றி அலைந்து கொண்டிருக்கையில் இத்தலமடைந்து அமைதி கொண்டாள் எனவும் கண்ணகியைக் கொண்டு மதுரையை எரியூட்டிய மதுரை காளியம்மனே இத்தலம் விரும்பி அமர்ந்தாள் எனவும் பெரியோர்கள் கூறுகின்றனர். சிறுவாச்சூர் வழிபாடு தெய்வம் செல்லியம்மன் ஆகும். ஒரு மந்திரவாதி தனது மந்திர வலிமையால் இவ்வம்மையைக் கட்டுப்படுத்தித் தீய செயல்களுக்கும் பயன் படுத்திவந்துள்ளான். அன்னை மதுரை காளியம்மன் இத்தலத்திற்கு ஒரு வெள்ளிக்கிழமை இரவு வந்து சேர்ந்தபோது செல்லியம்மனுடன் இரவு தங்க இடம் கேட்க செல்லியம்மனோ தன்னை மந்திரவலிமையால்தொல்லைப் படுத்தும் மந்திரவாதி பற்றிக் கூறிய போது மதுரைகாளியம்மன் தான் அதற்குத் தக்க வழி செய்வதாகக் கூறி தங்கி, வழக்கப்படி வந்த மந்திரவாதியை அன்னை மதுரை காளி எதிர்கொண்டு அழித்து விட, செல்லியம்மன் அன்னையின் திறன் கண்டு இனி அவளே சிறுவாச்சூர் ஆலயத்திலிருந்து அடியார்கட்கு அருள் பாலித்து வர வேண்டும் என வேண்டி, தான் அருகிலிருக்கும் பெரியசாமி மலை சென்று விடுவதாகவும் ஆனால் கோயிலில் எப்பொழுதும் தனக்கு முதல் மரியாதை வேண்டு மெனவும் கூற, மதுரை காளியம்மனும் அதற்கு ஒப்புக் கொண்டு ஆலயத்திலே அமர செல்லியம்மன் பெரியசாமி மலை சென்று கோயில் கொண்டுவிடுவதாகவும், சிறுவாச்சூர்க்கு வெள்ளிக்கிழமை வந்த மதுரை காளியம்மன் பக்தர்களுக்குத் திங்கள் கிழமை காட்சி தருவதாகவும், எனவே தான் சிறுவாச்சூர் ஆலயம், வெள்ளி, திங்கள் மட்டும்திறந்து பூசை செய்யப்படுவதாகவும் ஆன்றோர்கள் செவிவழியே இந்த அரிய வரலாற்றை தெரிவித்துள்ளனர். இந்த நாட்கள் தவிர ஆலய சிறப்புத் திருநாட்கள் சிலவற்றிலும் ஆலயம் திறந்து பூசை செய்யப்பட்டு வருகிறது. மற்ற நாட்களில் மதுரகாளியம்மனும், செல்லியம்மனுடன் பெரியசாமி மலையில் தங்குவதாக ஐதீகம் உள்ளது. மதுரை காளியம்மன் என்ற திருப்பெயரே பின்னாட்களில் மருவி மதுரகாளியம்மனாக வந்ததாகக் கூறுவார்கள் சினங்கொண்டு வந்த மதுரகாளியம்மன் இங்கு வந்து அமைதியுற்றுப் பக்தர்களுக்குப் பல இனிய நிகழ்வுகளை அருளுவதாலும், மதுரகாளியம்மன் (மதுரம்/ இனிமை) என்ற பெயர் பெற்றாள் என்பதும் பொருத்தமுடையதே ஆகும். செல்லியம்மன் தனக்கு முதல் மரியாதை தரவேண்டுமென்று கேட்டதற்கு ஏற்ப பூசையின் போது தீபாராதனை காட்டுகையில் முதலில் மலை நோக்கி மேலே தீபாராதனை காட்டி விட்டுத்தான் பின்னர் மதுரகாளியம்மனுக்குத் தீபாராதனை காட்டும் வழக்கம் இது தொண்றுதொட்டு நடைமுறையில் இருந்து வருகிறது.

திருவிழாக்கள்
ஆண்டுதோறும் சித்திரைத் திங்கள் அமாவாசைக்கு பின் வரும் முதல் செவ்வாய் அன்று பூசொரிதலுடன் தொடங்கி அதற்கு அடுத்த செவ்வாய் அன்று காப்புகட்டி 13 நாட்கள் பெருந்திருவிழா சிறப்புடன் நடைபெறுகிறது.

சிறப்பு வழிபாடுகள்
மேலும் தமிழ், ஆங்கில வருடப்பிறப்பு நாட்கள், ஆடி 18ம் பெருக்கு, புரட்டாசி நவராத்திரி 10 நாட்கள், ஐப்பசியில் தீபாவளித் திருநாள், கார்த்திகையில் தீபத் திருநாள், மார்கழி மாதப்பிறப்பு, வைகுண்ட ஏகாதசி, தைப் பொங்கல், தைபூசம், மாசிமகா சிவராத்திரி ஆகிய நாட்களில் திருக்கோயில் நடை திறக்கப்பட்டு வரிபாடுசெய்யப்படுகிறது.

நடை மற்றும் பூஜை நடைபெறும் நாட்கள்
வழிபாடு அருள்மிகு மதுரகாளியம்மன் திருக்கோயில் வாரத்தில் திங்கள், வெள்ளி கிழமைகளிலும் மற்றும் அமாவாசை மற்றும் பௌர்ணமி தினங்களிலும் நடை திறக்கப்பட்டு பூஜை நடைபெறுகிறது. மற்றும் சில குறிப்பிட்ட பண்டிகை நாட்களில் மட்டும் திருக்கோயில் நடை திறக்கப்படும். காலை 6.30 மணி முதல் இரவு 9.00 மணி வரை சன்னதி திறக்கப்படும். காலை 11.00 மணிக்கு அம்மனுக்கு அபிஷேகம் நடைபெறும். தொடர்ந்து தங்க கவசம் அணிவித்து இரவு 9.00 மணி வரை அம்பாள் தரிசனம் செய்யலாம். உபயதாரர் இருப்பின் மாலை 6.30 மணிக்கு தங்கரத புறப்பாடு நடைபெறும்.

அலுவலக முகவரி

செயல் அலுவலர்,
அருள்மிகு மதுரகாளியம்மன் திருக்கோயில்,
சிறுவாச்சூர், பெரம்பலூர் வட்டம் மற்றும் மாவட்டம்
பின்கோடு – 621113
கைபேசி : 8056553356